வழிபாட்டு வழிமுறைகள் விண்ணுலகிலிருக்கும் பிரம்மாவும், திருமாலும் இன்னபிற தேவர்களும் மண்ணுலகில் இல்லாததால்
வழிபாட்டு வழிமுறைகள்
விண்ணுலகிலிருக்கும் பிரம்மாவும், திருமாலும் இன்னபிற தேவர்களும் மண்ணுலகில் இல்லாததால் பூசை செய்ய ஆசைப்பட்டு இந்த மண்ணுலகிற்கு வந்து இறைவனை வழிபட்டு செல்கின்றனர். அப்படியானால் இந்த மண்ணுலகிலேயே வாழும் நாம் எந்த பிறவியில் செய்த புண்ணியமோ தினம்தினம் பூசை செய்வதற்கான வாய்ப்பினை பெற்றுள்ளோம். எனவே வழிபாடு எனப்படுவது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை என்பதை உணர்ந்து வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு நாம் இறைவனை நினைத்து வழிபாடு செய்வதனால் பாவ புண்ணியங்களிலிருந்து விலகி நிற்கிறோம் என்பதே உண்மை .
இந்நிலையில் வழிபாடானது நாம் செய்யும் நோக்கத்தையும் முறையையும் பொருத்து மூன்றாகக் கருதப்படுகிறது.
1.நித்திய வழிபாடு : எவ்வித காரணமும் இல்லாமல் இறைவனை வழிபடுவது தனது உரிமை என உணர்ந்து தினம்தினம் செய்யப்படுவது.
2.நைமித்திக வழிபாடு : ஒரு நிமித்தம் பற்றிச் செய்வது. அதாவது திருவிழா தினத்திலோ அல்லது விசேஷ தினத்திலோ செய்யப்படுவது. எ-கா. வருடப்பிறப்பு, மாதப்பிறப்பு, ஏகாதசி, பிரதோஷம், சிவனிரவு, சதுர்த்தி, சஷ்டி, அமாவாசை, கார்த்திகை போன்றவை.
3.காமிய வழிபாடு : குறிக்கோள் ஒன்றினை மனதில் நிறுத்தி அதனை வேண்டி செய்யப்படுவது. நமது வேண்டுதல்களில் ”பிறப்பு வேண்டாம்” என்பதே தலையானது. மேலும் நோய் நீக்கம், குழந்தைப்பேறு, கல்வி, செல்வம், திருமணம், தொழில் வளர்ச்சி வேண்டி செய்யப்படுவது.
நாம் காமிய வழிபாட்டில் ஒருவித தெளிவு பெறுதல் அவசியமாகும், அதாவது காமிய வழிபாட்டில் தான் வேண்டுவது கிடைத்துவிட்டால் இறைவனுக்கு இதைச்செய்வேன் என்றும் இல்லையெனில் செய்யமாட்டேன் என்றும் கைமாறு செய்யும்விதமாக வேண்டுதல் தவறாகும். காரணம் நாம் செய்வதால் இறைவனுக்கு ஆகப்போவது எதுவுமில்லை.
மேலும் நாம் செய்யும் வழிபாடானது, மழை வரும் காலத்தில் குடை நம்மை மழையிலிருந்து காப்பதுபோல நமது வாழ்விற்கு பாதுகாப்பாக அமைகிறது. ஆனால் நாம் பாவங்கள் செய்தால் நம்மை காக்க நமது வழிபாடு இருக்கும் என்று எண்ணுதல் தவறாகும், அது பெரும்சூறாவளியில் நினையாமலிருக்க குடைபிடிப்பதற்கு சமமாகும்.
வாழும்போதே வழிபாடு செய்வோமாக !
Comments